சென்னையில் மழை; திருப்பி விடப்பட்ட விமானங்கள்

சென்னையில் மழை மற்றும் பலத்த காற்றால், 20 நிமிடங்கள் வரை விமானம் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது.

Update: 2024-07-03 17:16 GMT

சென்னை,

சென்னையில் பல்வேறு இடங்களிலும் இரவு 8 மணி முதல் 2 மணிநேரத்திற்கும் கூடுதலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால், சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு கோவையில் இருந்து வந்த விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பலத்த காற்றால் விமானம் தரையிறங்க அனுமதி அளிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து, இண்டிகோ விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது.

விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளின் உத்தரவின்படி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, வளைகுடாவில் இருந்து வந்த விமானமும் மழையால் தரையிறங்க முடியாமல் இருந்தது. சென்னையில் பெய்து வரும் மழையால் 2 விமானங்கள் தரையிறங்குவது மற்றும் புறப்பாடு பாதிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் மழை மற்றும் பலத்த காற்றால், 20 நிமிடங்கள் வரை விமானம் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால், விமான பயணிகளும், விமானத்தில் வரும் பயணிகளை வரவேற்க காத்திருந்த உறவினர்களும் அவதிக்கு ஆளானார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்