ராமநாதபுரம் மாவட்டத்தில் விலை சரிவு-மல்லிகை கிலோ ரூ.300-க்கு விற்பனை

திருமணம் உள்ளிட்ட விழாக்கள் இல்லாத காரணத்தினால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பூக்கள் விலை சரிந்துள்ளது.

Update: 2023-04-26 18:45 GMT

திருமணம் உள்ளிட்ட விழாக்கள் இல்லாத காரணத்தினால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பூக்கள் விலை சரிந்துள்ளது.

பூக்கள் விலை

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மதுரை, திண்டுக்கல், நிலக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து தினமும் பூக்கள் வருகின்றன. இந்த பூக்களை வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் பெற்று விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கார்த்திகை மாதம் தொடங்கிய போது அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை போடுவதால் பூக்கள் விலை கிடுகிடுவென ஏறியது. தொடர்ந்து ஏற்ற நிலையில் இருந்து வந்த பூக்களின் விலை சற்று குறைந்து மீண்டும் மாசி சிவராத்திரி சமயத்தில் எகிறியது. இதன்பின்னர் பங்குனி மாதம் தொடங்கியதும் கோவில் திருவிழாக்களை காரணம் காட்டி பூக்கள் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் கோவில் திருவிழாக்கள் மற்றும் திருமண விழாக்கள் எதுவும் இல்லாத நிலையில் தற்போது பூக்கள் விலை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 2 மாதங்களில் விற்பனையான விலையை விட அதிரடியாக விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மல்லிகை கிலோ ரூ.300

இதுகுறித்து ராமநாதபுரத்தில் பூ வியாபாரி குமார் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தின் பூ தேவையை மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து வாங்கிதான் பூர்த்தி செய்து வருகிறோம். கார்த்திகை மற்றும் மாசி, பங்குனி மாதங்களில் மல்லிகை விலை ரூ.2 ஆயிரத்து 500-ஐ தாண்டி விற்பனையானது. பிச்சி பூ ரூ.2 ஆயிரமாகவும், முல்லை ரூ.2 ஆயிரத்து 600 ஆகவும், கனகாம்பரம் ரூ.2 ஆயிரத்து 800 ஆகவும், ரோஜா மலர்கள் ரூ.600 ஆகவும் உச்சத்தை தொட்டது. இந்நிலையில் தற்போது திருவிழாக்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளது.

தற்ேபாது மல்லிகை ரூ.300, கனகாம்பரம் ரூ.400, முல்லைப்பூ ரூ.300, ரோஜா ரூ.200, செவ்வந்தி ரூ.200 என அனைத்து பூக்களும் விலை குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். திருமண விழாக்கள் முகூர்த்த தினம் அதிகமானால்தான் பூக்களின் விலை மீண்டும் உயரும். அதுவரை இதே விலைதான் நீடிக்கும். இவ்வாறு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்