மர 'லோடு' உரசியதால் மின்கம்பி அறுந்தது
பள்ளிபாளையத்தில் மர ‘லோடு’ உரசியதால் மின்கம்பி அறுந்து விழுந்ததால் பொதுமக்கள் லாரியை சிறைபிடித்தனர்.
பள்ளிபாளையம்
ஆலாம்பாளையம் பேரூராட்சி ஆயக்காட்டூர் பகுதியில் உள்ள காகித ஆலைக்கு அதிக பாரத்துடன் மரம் ஏற்றி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தநிலையில் அந்த வழியாக சென்ற மின்கம்பி மீது லாரி உரசியதால் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் திரண்டு அடிக்கடி இதே போன்று நிகழ்வு நடைபெறுவதை கண்டித்து லாரியை சிறைபிடித்தனர். இந்ததகவல் அறிந்து வந்த காகித ஆலை நிர்வாகிகள் மற்றும் பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என காகித ஆலை நிர்வாகிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.