நாளை மறுநாள் மக்கள் நீதிமன்றம்

நாமக்கல் மாவட்டத்தில் 6 இடங்களில் நாளை மறுநாள் மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

Update: 2023-05-10 18:45 GMT

நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி நாமக்கல், திருச்செங்கோடு சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருச்செங்கோட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பரமத்தி சார்பு நீதிமன்றம், சேந்தமங்கலம் கோர்ட்டு மற்றும் குமாரபாளையம் கோர்ட்டு ஆகிய 6 இடங்களில், நாளைமறுநாள் (சனிக்கிழமை) தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

ஏற்கனவே கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் சமரசம் செய்து கொள்ள கூடிய சிவில் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன், கல்வி கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சினைகள் போன்ற வழக்குகள் இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

மக்கள் நீதிமன்றத்தில் முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது. மக்கள் நீதின்றம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பி தரப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் யாருக்காவது கோர்ட்டுகளில், மேலே குறிப்பிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து, அவர்கள் மக்கள் நீதிமன்றத்தை அணுகினால் வழக்குகளுக்கு சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்