"மக்கள் எப்போதும் அ.தி.மு.க. பக்கம்தான்"

“மக்கள் எப்போதும் அ.தி.மு.க. பக்கம் தான்” என்று கே.டி.ராேஜந்திரபாலாஜி பேசினார்.

Update: 2022-09-29 19:30 GMT

சிவகாசி, 

"மக்கள் எப்போதும் அ.தி.மு.க. பக்கம் தான்" என்று கே.டி.ராேஜந்திரபாலாஜி பேசினார்.

எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோல்

சிவகாசி திருத்தங்கலில் நேற்று நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவருக்கு முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராேஜந்திரபாலாஜி செங்கோல் வழங்கி பேசியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் விருதுநகர் மாவட்டம் வளர்ச்சி பெற்றது. இந்த மாவட்டத்துக்கு கேட்ட எல்லா திட்டங்களையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த மாவட்டத்தில் மட்டும் 68 இடங்களில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது. இப்போது அவை அனைத்தும் மூடுவிழா கண்டுள்ளன.

மக்கள் அ.தி.மு.க. பக்கம்தான்

நாம் கவனக்குறைவால்தான் ஆட்சியை இழந்தோம். மக்கள் எப்போதும் அ.தி.மு.க. பக்கம்தான் இருக்கிறார்கள். இங்கு உழைப்பவனுக்கு மரியாதை இருக்கிறது. அங்கு பிழைப்பவனுக்கு தான் மரியாதை.

பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழிலை காத்த பெருமை எடப்பாடி பழனிசாமிக்கு உண்டு. அவர் பாட்டெழுதி பேர் வாங்கினால், அதில் குற்றம் கண்டுபிடித்து பெயர் வங்க மு.க.ஸ்டாலின் பார்க்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில் பல புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. ஆனால் இப்போது பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றள.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் அமைச்சர்கள்

பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், தளவாய் சுந்தரம், மணிகண்டன், கடம்பூர் ராஜூ, சண்முகநாதன், விஜயபாஸ்கர், கோகுலஇந்திரா, ஆர்.பி.உதயகுமார், ராஜலட்சுமி, இன்பதமிழன், வைகைசெல்வன், மாபா. பாண்டியராஜன், எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா, ஜக்கையன், முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், சந்திரபிரபா மற்றும் பாப்புலர் முத்தையா, தச்சை கணேசராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்