வனத்துறையின் வனப்படையை 3 ஆண்டுக்குள் நவீனப்படுத்த உத்தரவு - அரசாணை வெளியீடு

வனத்துறையின் வனப்படையை மூன்று ஆண்டு காலத்திற்குள் நவீனப்படுத்தும் திட்டத்தை அறிவித்து அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Update: 2022-12-29 17:57 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு வனப்படையினை நவீனமயமாக்கல் திட்டமானது, மனித வன மேலாண்மை உட்பட ஆறு கூறுகளை உள்ளடக்கியுள்ளது. ரூ.8.55 கோடி செலவில் கள வனப்பணியாளர்களுக்கான பயிற்சி திட்டங்கள், தமிழ்நாடு வனபயிற்சி கல்லூரியில் பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மேலும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள சிறந்த நடைமுறைகளை வெளிப்படுத்துவதற்காக வனப் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

வனத்துறையின் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்த ரூ.40 லட்சம் செலவு செய்யப்படும். இதில் வனவிலங்குகளின் சிறந்த மேலாண்மைக்காக கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவு மையத்தை உருவாக்குதல், புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வனக்குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகத்தில் சைபர் செல் அமைத்தல் மற்றும் டிஜிட்டல் வயர்லெஸ் நெட்வொர்க் தகவல்தொடர்புகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

வனத்துறையை நவீன ஆயுதங்களுடன் மேம்படுத்துதல், வனவிலங்கு பாதுகாப்புக்கான நவீன ஆயுதத் தேவைகள் குறித்து ஆலோசனை வழங்க ஒரு நிபுணர் குழுவை அமைத்தல், மனித வனவிலங்கு மோதலை நிருவகிப்பதற்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஒரு முன்னுரிமை பகுதியில் அமைத்தல் மேலும் சிறந்த கண்காணிப்பிணை மேற்கொள்வதற்காக ஆளில்லா வான்வழி வாகனங்கள் பயன்படுத்துதல் ஆகிய பணிகள் மூன்றாம் கூறில் மேற்கொள்ளப்படும்.

ஐந்து இடங்களில் உயர் தொழில்நுட்ப வன நாற்றங்கால்களை அமைத்தல். மேம்பட்ட வனத் தீ கட்டுப்பாடு மற்றும் மீட்பு கருவிகள் நான்காம் கூறில் வழங்கப்படும். தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் சென்னையில் அமைந்துள்ள மேம்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனம், சம்பந்தப்பட்ட கூட்டு ஆராய்ச்சிப் பணிகளை ஊக்குவித்தல் மற்றும் தமிழ்நாடு வனத்துறை திட்டங்களுக்கு உலகளாவிய அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக காலநிலை மாற்றம் காரணமாக நவீன காலத்தின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பல புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நிலையான காடு வளர்ப்பிற்கு தற்போது முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்