அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்

பொன்முடி மீதான வழக்கு விசாரணை மீண்டும் இன்று நடைபெறுகிறது.

Update: 2024-07-09 01:36 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 33 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் 26 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். தொடர்ந்து, மற்ற சாட்சிகளின் விசாரணைக்காக நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயச்சந்திரன், சதானந்தன், கோபிநாதன் ஆகிய 3 பேர் மட்டும் நேரில் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், கோதகுமார் ஆகிய 4 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர்.மேலும் நேற்று அரசு தரப்பு 34-வது சாட்சியாக முன்னாள் கிராம உதவியாளர் மணி நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பாக சாட்சியம் அளித்தார். அப்போது அரசு உயர் அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரில் வழக்கு தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட்டேன், மற்ற விவரங்கள் ஏதும் தனக்கு தெரியாது என்று கூறி அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்தார்.இந்த சாட்சியத்தை பதிவு செய்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, இந்த வழக்கு விசாரணை மீண்டும் நாளை (அதாவது இன்று) நடைபெறும் என உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்