திருமணமான 5 மாதத்தில் காதல் கணவன் மீது புதுப்பெண் போலீசில் புகார்

பல்லடம் அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக திருமணமான 5 மாதத்தில் காதல் கணவர் மீது புதுப்பெண் போலீசில் புகார் செய்துள்ளார். மேலும் வீட்டில் உள்ளவர்கள் தாக்குவதாக கூறி ஓடிவந்து அவசர உதவி எண் 100-ஐ அழைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-07 12:34 GMT

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காதல் தம்பதி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரைப்புதூர் ஊராட்சி அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ராஜா (வயது 24). அதே போல் பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி ராஜலட்சுமி நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியத்தின் மகள் ரூபினி (24). இவர்கள் இருவருக்கும் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை.

இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ரூபினியின் அக்கா கணவர் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் ராஜா சென்னை போரூரில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக வேலைக்கு சேர்ந்தார். அதன்பின்னர் தனது காதல் மனைவி ரூபினியை சென்னைக்கு அழைத்து சென்று வாடகைக்கு வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.

கருத்து வேறுபாடு

இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக ரூபினியிடம் வரதட்சணை கேட்டு ராஜா அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரூபினியின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு சென்னையில் இருந்து பல்லடம் கரைப்புதூரில் உள்ள அவரது வீட்டிற்கு ரூபினியை ராஜா அழைத்து வந்தாகவும், அங்கு வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் ராஜாவின் குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு அவதூறாக பேசி சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ரூபினி வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்துள்ளார்.

பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியோடு அவசர தொலைபேசி எண் 100 மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் விரைந்து வந்து காயமடைந்த ரூபினியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இது குறித்து ரூபினி பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி கையை முறித்த ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை கேட்டு காதல் மனைவியை கணவர் அடித்து துன்புறுத்திய சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்