பரந்தூரில் புதிய விமான நிலையம் ரூ.20ஆயிரம் கோடியில் அமைகிறது: முதல்-அமைச்சர் அறிக்கை

பரந்தூரில் புதிய விமான நிலையம் ரூ.20 ஆயிரம் கோடியில் அமைக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-02 23:54 GMT

சென்னை,

இந்தியாவின் வளர்ச்சி பெற்ற-கட்டமைப்பு வசதிமிகுந்த மாநிலங்களில் முன்னணியில் திகழும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கு நமது திராவிட மாடல் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. நம் மாநிலத்துக்கு வருகை புரியும் முதலீட்டாளர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது உள்ள சென்னை விமானநிலையம் ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளை கையாண்டு வருகிறது.

மேலும், தற்போது நடைபெற்றுவரும் விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு, அடுத்த 7 ஆண்டுகளில் சென்னை விமானநிலையம் அதிகபட்ச அளவான ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் திறனை எட்டக்கூடும். சென்னை விமானநிலையத்தின் மென்மேலும் அதிகரித்துவரும் விமானப்பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து வளர்ச்சியை கருத்தில் கொண்டும், மாநிலத்தின் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானப்போக்குவரத்து சேவையை தொடர்ந்து பூர்த்தி செய்யும் வகையிலும் சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்க தகுதியான இடத்தை தேர்வு செய்யும் பணியை அரசு நிறுவனமான 'டிட்கோ' நிறுவனம் மூலம் தமிழ்நாடுஅரசு மேற்கொண்டது.

10 கோடி பயணிகள்

புதிய விமானநிலையம் அமைக்க 4 பொருத்தமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் இந்திய விமானநிலைய ஆணையம் ஆய்வு செய்து சாத்தியமான இடங்களாக பரிந்துரைத்த 2 இடங்களில் ஒன்றான பரந்தூரில் புதிய விமானநிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சென்னை விமானநிலையம் மற்றும் புதியதாக அமைக்கப்பட உள்ள விமானநிலையம் ஆகிய இரண்டும் சேர்ந்து செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக அமைய உள்ள விமானநிலையம், 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் உடையதாக அமைக்கப்படுகிறது.

2 ஓடுதளங்கள் (ரன்வேஸ்), விமானநிலைய முனையங்கள் (டெர்மினல் பில்டிங்க்ஸ்), இணைப்புப்பாதைகள் (டாக்சிவேஸ்), விமானங்கள் நிறுத்துமிடம் (அப்ரான்), சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்பு வசதிகள் மற்றும் தேவையான இதர உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய விமானநிலையம் அமைக்கப்பட உள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரித்தப்பின் புதிய விமானநிலையத்துக்கான திட்ட மதிப்பு இறுதி செய்யப்படும். தற்போதைய உத்தேச திட்டமதிப்பு ரூ.20 ஆயிரம் கோடி ஆகும்.

வளர்ச்சிக்கான படிக்கட்டு

மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் 2008-ல் வெளியிட்டுள்ள புதிய விமானநிலையம் அமைப்பதற்கான வழிகாட்டுதலின்படி தேர்வு செய்யப்பட்ட இடத்துக்கான ஒப்புதல் பெற மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள குழுவுக்கு விரைவில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும். இட அனுமதி ஒப்புதல் பெற்றபின், திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தப்படும் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இதனைத்தொடர்ந்து விமானநிலைய திட்டத்துக்கான கொள்கை ஒப்புதல் மற்றும் விமான நிலையம் செயல்படுவதற்கான அனுமதி மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் பெறப்படும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியை பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு, முன்னேற்ற அடையாளத்தை காண்கிற நிலையில், எதிர்காலத்தில் உலக நாடுகளுடன் ஒப்பிட்டு வளர்ச்சியினை காட்டும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. பரந்தூரில் அமைய இருக்கும் புதிய விமான நிலைய திட்டத்தை செயல்படுத்துவது என்பது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கான படிக்கட்டு. தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கான பயணத்தில் இது மற்றொரு மைல் கல்லாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்