நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து இன்று முதல் தொடக்கம்

சுற்றுலா மற்றும் வணிகத்தை மேம்படுத்தும் வகையில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுகிறது.

Update: 2024-08-16 01:58 GMT

நாகப்பட்டினம்,

நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு இன்று முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க உள்ளது. சிவகங்கை என்ற கப்பல் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இயக்கப்பட உள்ளது. சுற்றுலா மற்றும் வணிகத்தை மேம்படுத்தும் வகையில் இந்த கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுகிறது.

இன்று காலை 10 மணிக்கு நாகையில் இருந்து புறப்படும் கப்பல், மதியம் 2 மணிக்கு இலங்கையின் காங்கேசன்துறைக்கு சென்றடையும். மறுமார்க்கமாக நாளை மறுநாள் இலங்கையில் இருந்து புறப்படும் கப்பல், நாகைக்கு வந்தடையும்.

இந்த கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நபருக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரீமியம் வகுப்பில் 27 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பயணிக்க ஒரு நபருக்கு 7,500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த கப்பலில் பயணிகளுக்கு துரித உணவுகளை கட்டணத்துடன் பெற்றுக்கொள்ள உணவக வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு நபர் 60 கிலோ வரை பார்சல் எடுத்துச் செல்லவும், 5 கிலோ வரை கைப்பையில் எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்