குவைத் தீ விபத்து; அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு

குவைத் தீ விபத்து தொடர்பான விவரங்களுக்கு தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறையை தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2024-06-12 15:14 GMT

சென்னை,

குவைத் நாட்டில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்கப் பகுதியில் 6 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில், இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்ததாகவும், இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கே.வி.சிங் அவசர பயணமாக குவைத் புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் குவைத் தீ விபத்து தொடர்பான விவரங்களுக்கு தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறையை தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"குவைத் நாட்டின் மங்கப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில், இன்று (12.06.2024) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 49 நபர்கள் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வரப்பெற்றுள்ளது. அவர்களுள் எவரேனும் தமிழர் உள்ளனரா என்ற தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்கள் குவைத் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த தீ விபத்தில் தமிழர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்தம் விவரங்களைப் பெற்று, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்களான +91 1800 309 3793 (இந்தியாவிற்குள்), வெளிநாடு எனில் +91 80 6900 9900, +91 80 6900 9901 என்ற இரு எண்களிலும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்"

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்