தமிழகத்தை சீர்குலைக்க கவர்னர் முயற்சி செய்வதாக கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தை கவர்னர் ஆர்.என்.ரவி சீர்குலைக்க முயற்சி செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டி உள்ளார்.

Update: 2022-06-12 16:05 GMT

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, "வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றிக் கூறுகிறோம். சனாதன தர்மமும் அதையேதான் கூறுகிறது. நாட்டின் வளர்ச்சியைப் போல ஆன்மிக வளர்ச்சியும் அவசியம். அதுவே இந்தியாவின் வளர்ச்சி" என்று கூறியதோடு நிற்காமல், "சனாதன தர்மத்தினால் தான் இந்தியா ஒளிர்கிறது" என்று வகுப்புவாத, பிற்போக்குத்தனமான கருத்துகளை அப்பட்டமாகக் கூறியிருக்கிறார்.

இதன்மூலம் கவர்னர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராக மாறியிருக்கிறார். அவரது உரை அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. மதச்சார்பற்ற கொள்கையைக் குழிதோண்டி புதைக்கிற வகையில் சட்டவிரோதமாக ஒரு கவர்னரே பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கும் மட்டும் விரோதி அல்ல. அரசமைப்புச் சட்டத்துக்கும், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் விரோதமாகச் செயல்பட்டு, அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தைச் சீர்குலைக்க முயற்சி செய்து வருவதை எவரும் அனுமதிக்க முடியாது.

வகுப்புவாத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துகிற கருத்துகளை ஆர்.என்.ரவி கூறுவதை இனியும் நிறுத்தவில்லை எனில், அவருக்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்