கத்தார் நாட்டில் உணவு கொடுக்காமல் கொடுமைரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்ற கள்ளக்குறிச்சி பெண்கால் உடைந்த நிலையில் சென்னை திரும்பினார்

கத்தார் நாட்டில் தனி அறையில் அடைத்து, உணவு கொடுக்காமல் ரூ.5 லட்சம் கேட்டு ஏஜெண்டுகள் கொடுமைப்படுத்தியதால் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெண், கால் உடைந்த நிலையில் சென்னை திரும்பி வந்தார்.

Update: 2023-07-29 18:45 GMT


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் மாரி ராஜி (வயது 42). கணவரை இழந்து வறுமையில் தவித்த இவர், தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வெளிநாட்டுக்கு வீட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டுகள் மூலம் கத்தார் நாட்டில் வீட்டு வேலைக்காக கடந்த ஜூன் மாதம் 11-ந்தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.

கத்தார் நாட்டு தலைநகர் தோகா விமான நிலையத்தில் மாரி ராஜியை அங்குள்ள ஏஜெண்டுகள் வரவேற்று தங்களுடைய அலுவலகத்தில் தங்க வைத்தனர். பின்னர் கத்தார் நாட்டில் உள்ள 3 வீடுகளுக்கு அடுத்தடுத்து வேலைக்கு அனுப்பினர். ஆனால் அங்கு கடுமையான வேலை கொடுத்ததாக தெரிகிறது. ஓய்வே இல்லாமல் வேலை வாங்கியதுடன், சரியான உணவும் இல்லை என்று கூறப்படுகிறது.

ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்

இதனால் மாரி ராஜி வேலையை விட்டுவிட்டு ஏஜெண்டுகளின் அலுவலகத்துக்கு சென்று தங்கிக்கொண்டார். மேலும் அவர், "நான் இங்கு வேலை செய்ய விரும்பவில்லை. என்னை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி விடுங்கள்" என ஏஜெண்டுகளிடம் கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த ஏஜெண்டுகள், "ஒரு ஆண்டாவது இங்கு வேலை பார்க்க வேண்டும். இல்லையேல் ரூ.5 லட்சம் கொடுத்தால் திருப்பி அனுப்புகிறோம்" என்று கூறியதுடன், மாரி ராஜியை ஒரு அறையில் அடைத்து வைத்து, உணவு கொடுக்காமல் பட்டினிப்போட்டு கொடுமைப்படுத்தினர். மேலும் தகாத வார்த்தைகளாலும் திட்டியதுடன், வேலைக்கு சென்ற வீடுகளில் திருடியதாக போலீசில் புகார் கொடுத்து சிறையில் அடைத்து விடுவோம் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

தற்கொலை முயற்சி

இந்த நிலையில் அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த மாரி ராஜி, ஏஜெண்டுகளிடம் இருந்து தப்பிப்பதற்காக மாடியின் பால்கனியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றார். இதில் கால் எலும்பு முறிந்த நிலையில் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது மாரி ராஜி, ஆஸ்பத்திரியில் இருந்த வேறு ஒருவரின் செல்போன் மூலம் தனது குடும்பத்தாரை தொடர்பு கொண்டு தான் கொடுமைப்படுத்தப்படுவதை கூறி அழுதார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாரி ராஜியின் குடும்பத்தினர், அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சென்னையில் உள்ள தொண்டு அமைப்பிடம் இதுபற்றி கூறினர். அவர்கள், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை, மத்திய வெளியுறவுத்துறை, கத்தார் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றுக்கு இதுபற்றி தகவல் கொடுத்தனர்.

சென்னை திரும்பினார்

கத்தாரில் உள்ள ஐக்கிய தமிழர் அமைப்பு, இந்திய தூதரகம் உதவியுடன் மாரி ராஜியை மீட்டனர். அவரை, மருத்துவ சிகிச்சைகளுடன் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்தனர்.

இந்திய தூதரக அதிகாரிகள், இவருக்கு விமான டிக்கெட் மற்றும் ஏற்பாடுகளை செய்து கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை வந்து சேர்ந்த மாரி ராஜியை, விமான நிலையத்தில் அவருடைய குடும்பத்தினர், தொண்டு நிறுவனத்தினர் வரவேற்று வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அழைத்துசென்றனர்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் மாரி ராஜி, கூறியதாவது:-

உணவு கொடுக்க மறுப்பு

எனது கணவர் இறந்து விட்டார். குடும்பத்தை காப்பாற்ற வெளிநாடு போகும் முயற்சியில் ஈடுபட்டேன். அப்போது ஒரு பெண் ஏஜெண்டு என்னை கத்தார் நாட்டுக்கு அனுப்பி வைத்தார். சுலபமான வீட்டு வேலை, நல்ல சம்பளம், உணவு, தங்குமிடம் இலவசம், பாதுகாப்பான வேலை என்று அவர் ஆசை காட்டினார்.

ஆனால் கத்தார் நாட்டு ஏஜெண்டுகள், என்னை வேலைக்கு அனுப்பிய வீடுகளில் எல்லாம் மிக கடுமையாக வேலை வாங்கினர். இதனால் எனக்கு உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. எனவே வேலை செய்ய முடியாது. இந்தியாவுக்கு திரும்புகிறேன் என்று கூறினேன். ஆனால் ஏஜெண்டுகள் என்னை மிரட்டி, தனி அறையில் அடைத்து வைத்து கொடுமை செய்தனர். ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டினார். செல்போனை பறித்து விட்டு, உணவும் கொடுக்க மறுத்தனர்.

நடவடிக்கை

இதனால் கடந்த 6-ந்தேதி தற்கொலை செய்வதற்கு நான் ஏஜெண்டுகளின் அலுவலக மாடியில் இருந்து கீழே குதித்தேன். அதில் படுகாயம் அடைந்த என்னை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை பெற்றேன். அங்கிருந்த இந்தியாவில் உள்ள எனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தேன். என்னை தூதரகம் உதவியுடன் மீட்டுகொண்டு வந்துள்ளனர். நான் மறுபிறவி எடுத்து வந்திருக்கிறேன்.இனிமேல் வீட்டு வேலைக்கு என்று ஏஜெண்டுகள் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி பெண்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்வதை நிறுத்த வேண்டும். அதோடு பொய் வாக்குறுதி கொடுத்து பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்பி கொடுமைப்படுத்தும் ஏஜெண்டுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்