தச்சங்குறிச்சியில் இன்று ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை

தச்சங்குறிச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

Update: 2023-01-07 18:59 GMT

தச்சங்குறிச்சி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் போதுமான முன்னேற்பாடுகள் இல்லாததால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் திரண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்ததோடு, ஜல்லிக்கட்டு நடத்த உரிய அனுமதி அளிக்க வேண்டும் என முறையிட்டனர்.

இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தச்சங்குறிச்சிக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். பொதுமக்கள், விழாக்குழுவினருடன் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டு 8-ந் தேதி (இன்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான ஆணை அரசிதழிலும் நேற்று வெளியிடப்பட்டது.

கொரோனா பரிசோதனை

இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டிற்காக சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டல் நடைமுறைகள் அனைத்தும் முழுமையாக செய்யும் பணி நடைபெற்றது. இதையடுத்து, தேவாலயத்தின் அருகே வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் காளைகள் வரிசையாக அனுமதிக்கப்படும் இடத்தில் காளைகள் மீது வெயில் படாமல் இருப்பதற்காக திரைகள் அமைக்கப்பட்டன. மேலும் காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கும் பகுதியில் கூடுதலாக தேங்காய் நார்கள் கொட்டப்பட்டன.

மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நேற்று நடைபெற்றது. இதற்காக தச்சங்குறிச்சிக்கு மருத்துவ குழுவினர் வந்திருந்தனர். அவர்கள் மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து முடிவுகளை அறிவித்தனர்.

ஆர்.டி.ஓ. ஆய்வு

இதேபோல் காளைகளை அழைத்து வரக்கூடிய உரிமையாளர்கள் தரப்பில் 2 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக காளைகளை நேற்றே அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்தனர். மேலும் மாடுபிடி வீரர்களும் குவிந்தனர். இதனால் தச்சங்குறிச்சி கிராமமே களைக்கட்டியது. ஜல்லிக்கட்டையொட்டி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவ குழுவினர், முதல் உதவி மருத்துவ சிகிச்சை குழுவினர், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் தயார்நிலையில் உள்ளனர். மேலும், காளைகள் சீறி பாயக்கூடிய வாடிவாசல் தயார் நிலையில் உள்ளன. ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன் நேற்று மாலை கள ஆய்வு மேற்கொண்டார்.

முதல் ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டில் பங்கேற்க ஆன்லைன் மூலம் பதிவு மேற்கொள்ளப்பட்டதில் நேற்று மாலை 5 மணி நேர நிலவரப்படி 664 காளைகளும், 416 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர். இதில் பரிசீலனையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று காலை 7 மணியளவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜல்லிக்கட்டை காண மாவட்டத்தில் இருந்தும், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் ஏராளமானோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்