ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

சிங்கம்புணரி அருகே ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் மாடுகள் முட்டியதில் 61 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-05-21 18:45 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் மாடுகள் முட்டியதில் 61 பேர் காயம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை கிராமத்தில் உள்ள கலியுக மெய் அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். 10-ம் ஆண்டாக இந்த ஆண்டு திருவிழா நடைபெற்றது. புரவி எடுப்பின் முக்கிய நிகழ்வாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஊரின் மையப்பகுதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது.

முன்னதாக மாடுபிடி வீரர்கள் 424 பேர் பதிவு செய்து இருந்த நிலையில் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். 415 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தர்மபுரி, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், சேலம், மதுரை, புதுக்கோட்ைட, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்து 755 மாடுகள் களம் கண்டன.

அமைச்சர் பங்கேற்பு

விழாவிற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையேற்றார். தேவகோட்டை கோட்டாட்சியர் பால் துரை, தாசில்தார் சாந்தி ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்களுக்கு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் மாடுபிடி வீரர்கள் 50 பேர் கொண்ட குழுவினராக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுக்களாக களம் இறக்கப்பட்டனர்.

சீறிப்பாய்ந்த காளைகள்

இதை தொடர்ந்து நேற்று காலை 7 மணி முதல் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதில் ஏராளமான காளைகள் சீறி பாய்ந்தன. சில காளைகள் பிடிபட்டன. பல காளைகள் பிடிபடாமல் சென்றது. வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் கிருங்காக்கோட்டை கிராமத்தின் சார்பில் தங்க காசுகள், வெள்ளி காசுகள், சைக்கிள், கட்டில், பீரோ, மின்விசிறி, டைனிங் டேபிள், பித்தளை அண்டா, சில்வர் அண்டா என சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளுக்கும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பெண்மணி பாஸ்கரன் தன் சொந்த செலவில் ரொக்கப் பணமும் வெள்ளி காசுகளும் வழங்கினார்.

61 பேர் காயம்

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 61 பேர் காயமடைந்தனர்.அதில் 58 பேர் சிறுகாயம் அடைந்து கிருங்காக்கோட்டை மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.3 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை மற்றும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் அம்பலக்காரர் ஜோதி மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை, விழா குழு கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கிருங்காக்கோட்டை ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்