அதிமுகவில் சசிகலா இணைய வாய்ப்பு உள்ளதா? - கடம்பூர் ராஜூ பதில்

எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்டால் யாராக இருந்தாலும் அதிமுகவில் இணைத்துக் கொள்வோம் என கூறினார்.

Update: 2022-09-03 04:58 GMT

தூத்துக்குடி,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது, ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், சி.ஆரியமா சுந்தரம், விஜய் நாராயண் உள்ளிட்டோரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், வைரமுத்து தரப்பில் வக்கீல் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் 25-ந் தேதி உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

அதில், எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் ஜூலை 11-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்றும் சென்னை ஐகோர்ட் நேற்று தீரப்பளித்துள்ளது. இதனால் எடப்பாடி பழமிசாமி தரப்பினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு செல்லும் எனும் தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் கடம்பூர் ராஜூ தலைமையில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ,

எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்டால் யாராக இருந்தாலும் அதிமுகவில் இணைத்துக் கொள்வோம் என்று தெரிவித்தார்.

அதிமுகவில் இனி ஒற்றைத்தலைமை தான் இருக்கும் என்றும், சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார் என்றும் தெரிவித்தார்.            

Tags:    

மேலும் செய்திகள்