முன்னாள் விளையாட்டு அலுவலரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

முன்னாள் விளையாட்டு அலுவலரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தப்பட்டது

Update: 2023-05-02 18:45 GMT

சிவகங்கை

சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு மன்றத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலராக பணிபுரிந்தவர் கீதா. தற்போது இவர் வேலூர் மாவட்டத்தில் கோகோ மற்றும் கபடி வீரர்களுக்கு பயிற்றுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் சிவகங்கையில் பணிபுரிந்த காலத்தில் 2018-19-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை மாவட்ட அளவில் நடத்தவும், தடகளம், நீச்சல், கூடைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகளை இருபாலருக்கும் நடத்தவும் ரூ.8 லட்சத்து 70 ஆயிரத்தை சென்னையில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வழங்கியது.

இந்த போட்டிகளில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள வசதியாக 3 நாட்கள் பயிற்சி நடத்த வேண்டும் என்றும், அதன் பிறகு மாநில போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்காக ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ.200 வீதம் மூன்று நாட்களுக்கு ரூ.600-ம் அத்துடன் இருப்பிட வசதி அமைப்பது உள்ளிட்ட செலவுகளுக்காக ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 400 கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.. ஆனால் கீதா மாவட்ட அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட 189 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம் நடத்தாமல், பயிற்சி நடத்தியதாக ஆவணங்களை தயாரித்து ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 400-ஐ கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கீதா மீது சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஜனவரி மாதம் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று கீதா சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அவரிடம் இன்ஸ்பெக்டர் கண்ணன், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்