சத்தியமங்கலம் மார்க்கெட்டில் சம்பங்கி பூ கிலோ ரூ.500-க்கு ஏலம்ஒரே நாளில் 280 ரூபாய் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் சம்பங்கி ஒரே நாளில் 280 ரூபாய் விலை உயர்ந்து கிலோ ஒன்று ரூ.500-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-08-19 21:56 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் சம்பங்கி ஒரே நாளில் 280 ரூபாய் விலை உயர்ந்து கிலோ ஒன்று ரூ.500-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பூ மார்க்கெட்

சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணிக்கு பூக்கள் ஏலம் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும்.

நேற்று காலை 7 மணிக்கு வழக்கம்போல் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் ஏலம் தொடங்கியது. மார்க்கெட்டுக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 4 டன் பூக்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.757-க்கும், முல்லை ரூ.400-க்கும், காக்கடா ரூ.325-க்கும், செண்டுமல்லி ரூ.83-க்கும், பட்டுப்பூ ரூ.145-க்கும், சாதிமல்லி ரூ.575-க்கும், கனகாம்பரம் ரூ.850-க்கும், அரளி ரூ.220-க்கும், துளசி ரூ.60-க்கும், செவ்வந்தி ரூ.280-க்கும், சம்பங்கி ரூ.500-க்கும் ஏலம் போனது.

மகிழ்ச்சி

நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.595-க்கும், முல்லை ரூ.244-க்கும், காக்கடா ரூ.225-க்கும், செண்டுமல்லி ரூ.92-க்கும், பட்டுப்பூ ரூ.130-க்கும், சாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.650-க்கும், அரளி ரூ.180-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.180-க்கும், சம்பங்கி ரூ.220-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.192-ம், முல்லை ரூ.156-ம், காக்கடா ரூ.100-ம், பட்டுப்பூ ரூ.15-ம், சாதிமல்லி ரூ.75-ம், கனகாம்பரம் ரூ.200-ம், அரளி ரூ.40-ம், துளசி ரூ.10-ம், செவ்வந்தி ரூ.100-ம், சம்பங்கி ரூ.280-ம் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

ஒரே நாளில் சம்பங்கி பூ கிலோ ஒன்று ரூ.280 விலை உயர்ந்து விற்றதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பொதுவாக நேற்று அனைத்து பூக்களும் விலை உயர்ந்து விற்பனை ஆனது.

குறைந்த அளவிலேயே...

இதுகுறித்து பூ மார்க்கெட் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறுகையில், ' இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் முகூர்த்த நாட்கள் ஆகும். இதனால் பூக்கள் அனைத்துமே விலை உயர்ந்து விற்பனை ஆனது. குறிப்பாக சம்பங்கி பூக்கள் விசேஷ நாட்களில் ரூ.50 முதல் ரூ.150 வரை விலை உயரும். ஆனால் நேற்று சம்பங்கி பூக்கள் குறைந்த அளவிலேயே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. அதேவேளையில் முகூர்த்த நாட்கள் என்பதால் சம்பங்கி பூக்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். இதனால் ஒரே நாளில் சம்பங்கி பூ கிலோ ரூ.280 விலை உயர்ந்து விற்கப்பட்டது,' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்