அரசு கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்

அரசு கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்

Update: 2022-10-12 18:45 GMT

திருக்கடையூர் பகுதியில் அரசு கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு கொள்முதல் நிலையங்கள்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே ஆக்கூர், கிள்ளியூர், மாமாகுடி, காலகஷ்ணாதபுரம் உள்ளிட்ட அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மேலும் வெளிமாவட்டங்களில் உள்ள ஆலைகளுக்கும் அரவைக்காக சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்படுகிறது.

தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்

இந்த நிலையில் திருக்கடையூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன.

தற்போது மழை பெய்து வருவதால் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி வருகிறது. கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லாரிகள் வருவதில்லை

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

குறுவை அறுவடை நேரத்தில் மழை பெய்ததால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இந்த நெற்பயிர்களை காப்பாற்றி அறுவடை செய்து அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய கொண்டு சென்றால் அங்கு ஏற்கனவே நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. கடந்த 10 நாட்களாக கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை எடுக்க லாரிகள் வருவதில்லை.

அப்படியே வந்தாலும், ஓரிரு லாரிகள் தான் வருகின்றன. இதனால் ஒவ்வொரு அரசு கொள்முதல் நிலையத்திலும் 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

நெல் மூட்டைகள் தேக்கம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் நிலையங்களில் விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்து வாங்கிய கடனை அடைக்கலாம் என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

எனவே கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக எடுத்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்