மேல்படிப்புக்கு செல்லும் மாணவிகள் மாதம் ரூ.1,000 பெற விண்ணப்பிப்பது எப்படி?

அரசு பள்ளியில் படித்து மேல்படிப்புக்கு செல்லும் மாணவிகள் மாதம் ரூ.1,000 பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-10-30 18:59 GMT

புதுமை பெண் திட்டம்

தமிழக முதல்-அமைச்சரால் கடந்த செப்டம்பர் மாதம் 5-ந் தேதி அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல்படிப்பு மற்றும் தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமை பெண் திட்டம் தொடங்கப்பட்டது.

இதுவரை 2, 3 மற்றும் 4-ம் ஆண்டில் பயிலும் 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 1,622 மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

11-ந் தேதி வரை பதிவு செய்யலாம்

தற்போது https://www.pudhumaipenn.tn.gov.in என்ற வலைத்தளம் மூலம் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இந்த வலைத்தளத்தில் மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது.

இத்திட்டதின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக) மாற்றுச்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தற்போது 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.

உதவி மையம்

மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 91500 56809; 91500 56805; 91500 56801 மற்றும் 91500 56810 எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும், விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பிக்குமாறு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்