குண்டாறு அணை நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் செங்கோட்டை குண்டாறு அணை நிரம்பியது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-11-07 18:45 GMT

செங்கோட்டை:

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் செங்கோட்டை குண்டாறு அணை நிரம்பியது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குண்டாறு அணை

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாய பணிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருவது குண்டாறு அணையாகும். இந்த அணையின் மூலம் சுமார் 1,200 ஏக்கர் பாசன பரப்பளவில் முப்போக சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. குண்டாறு அணையை நம்பி அப்பகுதி விவசாயிகள் சுமார் 950 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்து வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையால் குண்டாறு அணை முழு கொள்ளளவை விரைவில் எட்டும். அணையில் இருந்து வெளியேறும் நீரினால் செங்கோட்டை பகுதி குளங்கள், நல்லூர், பிரானூர், தென்கால்வாய், மெட்டு, மூன்று வாய்க்கால், கொட்டாகுளம் பகுதி விவசாயிகள் அதிகளவில் பயனடைவார்கள்.

விவசாயிகள் மகிழ்ச்சி

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய காலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மூன்று மாதங்கள் வரை குண்டாறு அணை முழு கொள்ளளவை எட்டியிருந்ததால் உபரிநீர் கிட்டத்தட்ட 122 நாட்கள் வரை வழிந்தோடியது. இதன்மூலம் 11 குளங்கள் நிறைந்ததால் கார் சாகுபடி சிறந்து விளங்கியது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் மழை குறைந்ததால், அணையில் தண்ணீரின் இருப்பும் படிப்படியாக குறைந்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் குண்டாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் இந்த அணை நேற்று அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உபரிநீர் வழிந்தோடி வருகிறது. இதனால் பிசான சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அணைகளுக்கு நீர்வரத்து

தென்காசி மாவட்ட அணைகளான கடனாநதி அணை நீர்மட்டம் 62.50 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 140 கன அடியாகவும், வெளியேற்றம் 40 கன அடியாகவும் உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 67.50 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 45 கன அடியாகவும், வெளியேற்றம் 30 கன அடியாகவும் உள்ளது.

கருப்பாநதி அணை நீர்மட்டம் 50.20 அடியாக உள்ளது. அணைக்கு வருகிற 25 கன அடி தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 83.75 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாகவும், வெளியேற்றம் 35 கன அடியாகவும் உள்ளது.

மழை அளவு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

அம்பை -9, சேரன்மாதேவி -10, பாளையங்கோட்டை -15, நெல்லை -7, நாங்குநேரி -4, ராதாபுரம் -10, சேர்வலாறு -29, மணிமுத்தாறு -14, சங்கரன்கோவில் -2, செங்கோட்டை -7, சிவகிரி -12, தென்காசி -4, கடனாநதி -7, ராமநதி -5, கருப்பாநதி -9, குண்டாறு -20, அடவிநயினார் -1.

Tags:    

மேலும் செய்திகள்