கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல் அமைப்புச் சட்ட விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படுகிறார் - வைகோ

கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல் அமைப்புச் சட்ட விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படுகிறார் என்று வைகோ கூறியுள்ளார்.

Update: 2023-06-15 15:05 GMT

சென்னை,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

14.06.2023 அன்று, சென்னையில் நடைபெற்ற மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 29 ஆவது பொதுக்குழுவில் தமிழ்நாடு கவர்னர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்குமாறு குடியரசுத் தலைவரிடம் கேட்டுக்கொள்ளும் கையெழுத்து இயக்கத்தினை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதவாத சக்திகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், இந்துத்துவா கோட்பாட்டைத் திணிக்கும் வகையிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையிட்டு தடுக்கும் வகையிலும் தன் மனம்போன போக்கில் செயல்பட்டு வரும் கவர்னர் ரவியை, தமிழ்நாடு கவர்னர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் விளக்கிச் சொல்லி அவர்களது கையெழுத்துக்களைப் பெறும் இயக்கத்தினை மறுமலர்ச்சி தி.மு.கழகம் 20.06.2023 முதல் 20.07.2023 வரை நடத்திட உள்ளது.

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் கிளைக்கழக, பேரூர் கழக, நகரக் கழக, ஒன்றியக் கழக, பகுதிக் கழக, மாவட்டக் கழக நிர்வாகிகள் மிக முக்கியமான இந்தப் பிரச்சினையில் ஆர்வம் செலுத்தி பொதுமக்களைச் சந்தித்து அவர்களது இசைவினைப் பெற்று, கையெழுத்துப் பெற்று தலைமைக் கழகத்திற்கு படிவங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஜனநாயக நெறிமுறைகளுக்கும், அரசியல் அமைப்புச் சட்ட விதிமுறைகளுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கும் எதிராகச் செயல்படும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை கவர்னர் பொறுப்பிலிருந்து அகற்றுவற்காக மறுமலர்ச்சி தி.மு.கழகம் நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு தமிழ்நாட்டு மக்களும், அரசியல் கட்சிகளும், தோழமை இயக்கங்களும் ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்