மும்பை நகை பட்டறை அதிபரிடம் 3 கிலோ தங்கம் வாங்கி மோசடி

மும்பை நகை பட்டறை அதிபரிடம் 3 கிலோ தங்கம் வாங்கி மோசடி செய்த கோவை உக்கடத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-09-08 19:30 GMT

செல்வபுரம், செப்

மும்பை நகை பட்டறை அதிபரிடம் 3 கிலோ தங்கம் வாங்கி மோசடி செய்த கோவை உக்கடத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை பட்டறை உரிமையாளர்

மராட்டிய மாநிலம் மும்பை விதல்வாடி பகுதியை சேர்ந்தவர் உத்தம்சவ் (வயது 44). நகைப்பட்டறை அதிபரான இவர் மோசடி தொடர்பாக கோவை செல்வபுரம் போலீஸ்நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

நான் மும்பையில் தங்க நகை பட்டறை தொழில் செய்து வருகிறேன். இந்த நிலையில் எனக்கு, கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த முன்னா மண்டேல், நியாஸ்மாலிக், மாசின்மாலிக் மற்றும் ஜெயிரூன் மாலிக் ஆகிய 4 பேரும் எனது நண்பர் மூலம் பழக்கம் ஆனார்கள். இதையடுத்து அவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு என்னை தொடர்பு கொண்டனர். அப்போது அவர்கள் என்னிடம் நாங்கள் 4 பேரும் சேர்ந்து கோவையில் தங்க நகைகளை மொத்தமாக பெற்று விற்பனை செய்து அதற்கு பதில் சுத்த தங்க கட்டிகளை கொடுத்து தொழில் செய்து வருவதாக கூறினர்.

4 பேர் மீது வழக்கு

இதை உண்மை என்று நம்பிய நான் அவர்களிடம் கடந்த 2016 முதல் 2018-ம் ஆண்டு வரை 8 கிலோ தங்க நகைகளை கோவையில் வைத்து அவர்கள் 4 பேரிடம் கொடுத்தேன். பின்னர் அவர்கள் எனக்கு 5 கிலோ வரை தங்க கட்டிகளை கொடுத்தனர். ஆனால் அவர்கள் மீதம் உள்ள 3 கிலோ தங்கத்தை வழங்கவில்லை.

இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது காலம் தாழ்த்தி வந்ததுடன், சரியாக பதிலளிக்கவும் இல்லை. இதனால் நான் மோசடி செய்யப்பட்டதை அறிந்தேன். எனவே அவர்கள் 4 பேரிடம் இருந்து எனது நகையை மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் முன்னா மண்டேல், நியாஸ்மாலிக், மாசின்மாலிக் மற்றும் ஜெயிரூன் மாலிக் ஆகிய 4 பேர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

===================

----

Reporter : S.MUTHUKUMAR_Staff Reporter Location : Coimbatore - Coimbatore

Tags:    

மேலும் செய்திகள்