தொழிற்பேட்டை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

கள்ளிமந்தையம் அருகே தொழிற்பேட்டை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிரிவித்னர்.

Update: 2023-07-13 20:00 GMT

ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் அருகே ஈசக்காம்பட்டியில், தமிழக அரசு சார்பில் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. இதற்கு கள்ளிமந்தையம் மற்றும் அதனைச்சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக விவசாயிகள் நேற்று ஈசக்காம்பட்டியில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் பழ.ரகுபதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார். தொழிற்பேட்டை அமைந்தால் சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர் மாசுபடும். சுற்றுச்சூழல் மாசடைந்து பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும். விவசாயத்துக்கு தகுதியற்றதாக விளைநிலங்கள் மாறி விடும் என்று தெரிவித்த விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க கட்சி பாகுபாடின்றி ஒன்றிணைந்து தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இறுதிவரை போராடுவது என்று கூட்டத்தில் முடிவு செய்தனர்.

முன்னதாக தொழிற்பேட்டை அமைய உள்ள இடத்தை, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையிலான விவசாயிகள் பார்வையிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்