அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

Update: 2023-11-22 10:13 GMT

சென்னை, 

சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச்சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சிறையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை ஐகோர்ட்டு கடந்த மாதம் 19-ந் தேதி தள்ளுபடி செய்தது.

ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுத்த உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மாதம் 30-ந் தேதி விசாரித்தது. செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை சார்பில் விசாரணையை தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதனை விசாரித்த நீதிபதிகள் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை டிசம்பர் 4ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டனர். இந்த விசாரணைக்கு ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜரானார். கடந்த ஜூன் 14ஆம் தேதி கைதான செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 11 வது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்