எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிந்தது

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிந்தது/

Update: 2023-04-20 18:45 GMT

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு கடந்த 6-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 8,359 மாணவர்களும், 8,480 மாணவிகளும், 497 தனித்தேர்வர்களும், 165 மாற்றுத்திறனாளி தேர்வர்களும் என மொத்தம் 17,501 பேர் எழுத விண்ணப்பித்தனர். இந்த தேர்வுக்காக 84 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தேர்வு மையங்களில் கடைசி நாளான நேற்று சமூக அறிவியல் தேர்வு எழுதிவிட்டு தேர்வு மையத்திலிருந்து மாணவ, மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உற்சாகமாக துள்ளி குதித்தபடி வெளியே வந்தனர்.

இதுகுறித்து ராமேசுவரத்தை சேர்ந்த மாணவி கலைமுகில் கூறியதாவது:- 5 பாடங்களும் எதிர்பார்த்ததை விட மிக எளிதாகவே இருந்தது. தேர்வை நன்றாக எழுதியுள்ளேன். கடந்த 2 மாதத்திற்கு மேலாக அரசு பொதுத்தேர்வு என்ற பயத்திலேயே பதட்டத்துடன் இருந்தோம். தற்போது தேர்வு முடிந்துள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

மாணவி யோகரத்னா:- அனைத்து தேர்வுகளுமே மிகவும் எளிதாக இருந்தது. நாங்கள் படித்த அனைத்துமே கேட்கப்பட்டது. தேர்வுகள் முடிவடைந்த பிறகுதான் மகிழ்ச்சியாக உள்ளது. நல்ல மதிப்பெண் வரும் என எதிர்பார்க்கிறேன். மாணவர் நிதிஷ்:- எதிர்பார்த்ததை விடவே அனைத்து தேர்வுகளும் மிகவும் எளிதாக இருந்தது. நன்றாக எழுதியுள்ளேன். நல்ல மதிப்பெண் வரும் என்ற நம்பிக்கையில் உள்ளேன். தற்போது தேர்வு முடிந்து மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. தேர்வு முடிவுகள் வருவதற்கு ஓரிரு நாள் முன்பு சற்று பயம் இருந்தாலும் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்