அ.தி.மு.க.வை கைப்பற்ற நினைப்பவர்களுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி நல்ல பாடத்தை கற்றுத் தரும்-கு.ப.கிருஷ்ணன் பேட்டி

அ.தி.மு.க.வை கைப்பற்ற நினைப்பவர்களுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி நல்ல பாடத்தை கற்றுத் தரும் என்று கு.ப.கிருஷ்ணன் கூறினார்.

Update: 2023-01-31 19:07 GMT

அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கு.ப.கிருஷ்ணன் கரூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நேற்று முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் தொடங்கி உள்ளது. திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது. கடந்த 50 ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் சின்னமாக இருந்த இரட்டை இலைக்கு தற்போது சோதனை வந்திருக்கிறது என நினைக்கும் போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது பற்று கொண்டவர்கள், தொண்டர்கள் என அனைவரும் வருத்தமாக உள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் அ.தி.மு.க.வினர் போட்டியிட்டனர். தற்போது இந்த சின்னத்தை பெறுவதற்கு கோர்ட்டுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டாலே போதும். யார் வேண்டுமானாலும் வேட்பாளராக நிறுத்தி கொள்ளுங்கள். யாருக்கு இரட்டை இலை சின்னம் தர வேண்டும் என நீங்கள் கூறினாலும் ஓ.பன்னீர் செல்வம் இரட்டை இலை சின்னத்திற்கு கையெழுத்து போட்டு தருவார் என்ற உறுதியை கூறுகிறேன். அ.தி.மு.க.வை கைப்பற்ற வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி நல்ல பாடத்தை கற்று தரும். ஓ.பன்னீர் செல்வம் எப்போதும் தி.மு.க.வோடு உறவு வைத்து கொள்ள மாட்டார். ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிடுவதாக கூறி ஆதரவு கேட்டுக் கொண்டால் ஆதரவு தருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்