ஈரோடு இடைத்தேர்தல்: அ.தி.மு.க வேட்புமனு தாக்கல் ஒத்திவைப்பு

ஈபிஎஸ் அணி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வரும் 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

Update: 2023-02-03 03:53 GMT

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசும், அ.தி.மு.க., ஓ.பி.எஸ் அணி, தே.மு.தி.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி என முக்கிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட நேற்று வரை மொத்தம் 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் பல்வேறு கட்சி நிர்வாகிகளும் வாக்காளர்களை சந்தித்து தங்களுக்கு வாக்களிக்கும்படி தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான எடப்பாடி பழனிசாமி தரப்பு அ.தி.மு.க வேட்பாளர் வேட்புமனு தாக்கல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு இன்று 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில், வரும் 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி உடன் பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்த நிலையில் வேட்புமனு தாக்கல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்