சொத்து தகராறில் முதியவர் வெட்டிக்கொலை

சிவகாசி அருகே சொத்து தகராறில் முதியவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-07-30 18:51 GMT

சிவகாசி,

சிவகாசி அருகே சொத்து தகராறில் முதியவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

சொத்து தகராறு

சிவகாசி அருகே உள்ள நடுவப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் வீரப்பன் என்கிற மலையாண்டி (வயது 65). இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. பஞ்சர் ஒட்டும் வேலை செய்து வந்த வீரப்பன் தனது சொந்த நிலத்தில் வீடு கட்டி தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் அவரது உறவினர் கணேஷ் பாண்டி (26) என்பவருடன் சொத்து தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்தது. சொத்து பிரச்சினை குறித்து கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீரப்பன் தனது வீட்டில் மர்மமான முறையில் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

பிரேத பரிசோதனை

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த வீரப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வீரப்பன் உறவினர் வைரமுத்து கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சொத்து தகராறு காரணமாக வீரப்பன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதற்கிடையே இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த கணேஷ்பாண்டியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் திருத்தங்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்