கன்னியாகுமரியில் நில அதிர்வு - மக்கள் அச்சம்

சில வினாடிகள் உணரப்பட்ட இந்த நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

Update: 2024-06-06 04:48 GMT

குமரி,

உலகபுகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் கன்னியாகுமரி எப்போதும் பரபரப்பாக இருக்கும்.

இந்த நிலையில் கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. குண்டல், சுவாமிநாதபுரம், சர்ச் ரோடு மற்றும் வாவத்துறை ஆகிய பகுதிகளில் மாலை 6 மணி அளவில் லேசான நில அதிர்வை மக்கள் உணர்ந்துள்ளனர். ஒரு சில வினாடிகள் மட்டுமே இந்த நில அதிர்வானது உணரப்பட்டு இருக்கிறது.

நில அதிர்வு ஏற்பட்டவுடன் சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் உடனடியாக வீட்டுக்குள் இருந்து அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். சர்ச் ரோடு பகுதியில் வீடுகள் இடிந்துவிடுமோ என்ற அச்சத்துடனே ரோட்டில் மக்கள் நின்றனர். ஆனால் அதன் பிறகு நில அதிர்வு ஏற்படவில்லை. சில வினாடிகள் மட்டுமே உணரப்பட்ட இந்த நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்ட அதே நேரத்தில் நெல்லை மாவட்டத்தின் கூடங்குளம் உள்ளிட்ட குமரி மாவட்ட எல்லையோர பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்