மாரண்டஅள்ளி அருகேகிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் சாவு

Update: 2023-04-06 19:00 GMT

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலியானார்.

கல்லூரி மாணவர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் மாரண்டஅள்ளி மின்வாரியத்தில் ஒயர்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் பிரகாஷ் (வயது 20). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு சிவில் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

இந்தநிலையில் பிரகாஷ் நேற்று மதியம் கோவில்பட்டி பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான கிணற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கிணற்றில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கினார்.

போலீசார் விசாரணை

இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கிணற்றில் குதித்து மாணவர் பிரகாசை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்துக்கு பிறகு அவர் பிணமாக மீட்கப்பட்டார். பிரகாசின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாரண்டஅள்ளி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்