பரமத்தியில் சாலையோரத்தில் நின்ற காரில் விவசாயி மர்மசாவு போலீசார் விசாரணை

Update: 2022-12-15 18:45 GMT

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 50). விவசாயி. இவர் மனைவியை விட்டு பிரிந்து தாய் கருப்பாயி வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் உதயகுமார் ‌‌‌‌‌‌மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் உதயகுமார் நேற்று தனது காரில் பரமத்திக்கு வந்தார். பின்னர் அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபாட்டில் வாங்கி வந்து சாலையோரம் காரை நிறுத்தி காருக்குள் இருந்து மது குடித்ததாக தெரிகிறது. பின்னர் காரில் இருந்து வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அருகில் உள்ள கடைக்காரர்கள் சென்று காரில் பார்த்தனர்.

அப்போது உதயகுமார் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உதயகுமாரின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் உதயகுமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்