மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதல்; 7 வயது சிறுவன் பலி

தாராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் 7 வயது பள்ளி சிறுவன் பலியானான், பெற்றோர் பலத்த காயமடைந்தனர்.

Update: 2023-06-26 16:19 GMT

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பள்ளி சிறுவன்

சேலம் அசோக் நகரை சேர்ந்தவர் அப்துல் நவ்பில் (வயது 32). இருசக்கர வாகன சீட்கவர் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி நிலோபர் நிஷா (28). இவர்கள் மகன் முகமது நவ்பில் (7). இவன் சேலம் அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் நேற்று காலை தாராபுரத்தில் வசிக்கும் உறவினர் பானு வீட்டிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.

வேன் மோதி பலி

அவர்கள் ஈரோடு-காங்கயம் வழியாக தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அப்துல் நவ்பில் ஓட்டி வந்தார். காங்கயத்தில் இருந்து தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது காங்கயம் பிரிவு சாலை அருகே திருப்பூரில் இருந்து இரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு தாராபுரம் நோக்கி வந்த சரக்கு வேன் இவர்கள் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் அப்துல் நவ்பில், மனைவி நிலோபர் நிஷா மற்றும் மகன் முகமது நவ்பில் ஆகிய மூவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர். அப்போது சிறுவன் முகமது நவ்வில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தான்.

இது குறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவன் உடலை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த கணவன்-மனைவி இருவரையும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விருதுநகர் மாவட்டம் முள்ளிசேவல் பகுதியை சேர்ந்த வேன் டிரைவரான சங்கர பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்