தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-04-02 18:19 GMT

குடிநீர் தட்டுப்பாடு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா வரகூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மாதம் இரண்டு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இதனால் இப்பகுதியினர் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் சூழல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுத்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வரகூர்.

ஷேர் ஆட்டோக்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்

பெரம்பலூர் நகர்ப்பகுதியில் ஷேர் ஆட்டோக்கள் அதிகமாக இயங்குகின்றன. ஆனால் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தம் இல்லாத பகுதிகளிலும் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றனர். இதனால் அதன் பின்னால் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே போக்குவரத்து போலீசார் ஷேர் ஆட்டோக்களை கட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தங்களில் மட்டும் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் கிராமத்தில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியின் அருகே அப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மாலைப்போல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பாடலூர்.

பாலப்பணி விரைந்து முடிக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா தேசிய நெடுஞ்சாலையில் தற்போது பாலம் வேலை நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், ஆலத்தூர்.

தகனமேடை வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம், மேலமாத்தூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு யாரேனும் இறந்தால் அப்பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இங்கு தகனமேடை இல்லாததால் மழை காலங்களில் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தகனமேடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், மேலமாத்தூர்.

Tags:    

மேலும் செய்திகள்