மனு மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து தாலுகா அலுவலகத்தில் தம்பதி தர்ணா - திட்டக்குடியில் பரபரப்பு

மனு மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் தம்பதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-21 19:44 GMT

திட்டக்குடி, 

திட்டக்குடி அருகே உள்ள வையங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவருக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்ததுடன் வேலி அமைத்து, பட்டா மாற்றம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பாண்டுரங்கன் ஆக்கிரமிப்பு இடத்தை அளவீடு செய்து மீட்டு தரக்கோரி திட்டக்குடி தாலுகா அலுவலகம், விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம், கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தார். ஆனால் நடவடிக்கை இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த பாண்டுரங்கன் தனது மனைவி அஞ்சலையம்மாளுடன் நேற்று திட்டக்குடி தாலுகா அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர், தான் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வரும் வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்தும், தனக்கு சொந்தமான இடத்தை மீட்டு தரக்கோரியும் கண்டன கோஷம் எழுப்பியபடி திடீரென தாலுகா அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதைபார்த்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதியரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மனு மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை ஏற்ற தம்பதியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்