தயார் நிலையில் எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட்: நாளை கவுண்டவுன் தொடக்கம்

இ.ஓ.எஸ்-08 செயற்கைக்கோளை எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட் மூலம் 16-ந் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

Update: 2024-08-14 02:56 GMT

சென்னை,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ , புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை கொண்ட அதிநவீன இ.ஒ.எஸ்.-08 எனும் செயற்கைக் கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் சிறியரக எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து சுதந்திர தினமான நாளை (ஆகஸ்ட் 15-ம் தேதி) காலை விண்ணில் ஏவப்பட இருந்தது.

இந்நிலையில் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, இ.ஓ.எஸ்-08 செயற்கைக்கோள் எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட் மூலம் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ.ஓ.எஸ்-08 செயற்கைக்கோளில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்பராரெட் பேலோடு (இ.ஓ.ஐ.ஆர்.), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிபிளக்டோமெட்ரி பேலோட் (ஜ.என்.எஸ்.எஸ்-ஆர்) மற்றும் எஸ்.ஐ.சி. யுவி டோசிமீட்டர் ஆகிய ஆய்வு கருவிகள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த கருவிகளின் பணிக்காலம் ஒரு ஆண்டாகும்.

இந்த செயற்கைக்கோள் பூமியை 24 மணி நேரமும் புகைப்படம் எடுத்து கண்காணிக்கும். பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தீ கண்டறிதல் போன்ற பயன்பாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு முன்பாக இறுதிகட்டப்பணியான கவுண்டவுன் நாளை (வியாழக்கிழமை) தொடங்க உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்