பட்டியல் இன மக்களுக்கான மத்திய அரசின் நிதியை மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு பயன்படுத்துவது சட்டப்படி தவறாகும்- மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

பட்டியல் இன மக்களுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு பயன்படுத்துவது சட்டப்படி தவறாகும் என மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Update: 2023-08-07 20:34 GMT


பட்டியல் இன மக்களுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு பயன்படுத்துவது சட்டப்படி தவறாகும் என மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

பேட்டி

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தற்போது தஞ்சை டெல்டா பகுதியில் நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதற்கு காரணம் தமிழக அரசு தான். கர்நாடகாவில் இருந்து ஜூன் மாதம் பெற வேண்டிய 32 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக பெற்று தராததினால் தற்போது தஞ்சையில் நெற்பயிர்கள் கருகி உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதற்கு அரசு பொறுப்பேற்று விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் அளிக்க வேண்டும். மேலும் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் பெற்று தந்த ஒரே முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான்.

என்.எல்.சி.விவகாரத்தில் ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆதலால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

தவறு

மத்திய அரசு பட்டியல் இன மக்களுக்காக ஒதுக்கி உள்ள ரூ.1500 கோடியை தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகைக்காக பயன்படுத்தி இருந்தால் அது சட்டப்படி குற்றமாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்க்கையின் அடித்தளத்தில் இருக்கும் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை விதியை மீறி ஒதுக்கியது தவறு.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட பலர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்