புகார்பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-10-19 18:45 GMT

ஆக்கிரமிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள அய்யனாரேந்தல் ஊருணியில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால் ஊருணியில் நீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊருணியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோபி, தொண்டி.

சாலைவசதி வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் தாயனூர் கிராமத்தில் மயானம் செல்லும் வழியில் சாலை வசதி சரியாக இல்லை. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே இந்த பகுதியில் சாலை வசதி ஏற்படுத்திதர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுரேஷ், தாயனூர்.

நாய்கள் தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், முதுகுளத்தூர்.

மேம்பாலம் வேண்டும்

ராமநாதபுரம் பாரதி நகர் கிழக்கு கடற்கரை சாலையும், ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையும் சந்திக்கும் ஈ.சி.ஆர். சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ரவுண்டானா இல்லை. சிக்னல் விளக்குகளும் இல்லை. இதன் காரணமாக இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த வழிதடத்தில் மேம்பாலம் அமைத்து போக்குவரத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்வர்தீன், ராமநாதபுரம்.

போக்குவரத்து நெருக்கடி

ராமநாதபுரம் அரண்மனை ராஜவீதி, தலைமை தபால் அலுவலகம் சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து காணப்படுகிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து நெருக்கடியால் வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் சீரான போக்குவரத்திற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

வேல்முருகன், ராமநாதபுரம்.

Tags:    

மேலும் செய்திகள்