நிலத்தின் பேரில் கடன் பெற்று தருவதாகரூ.6 கோடி நிலம் அபகரிப்புமோசடி கும்பல் மீது பெண் புகார்

Update: 2023-07-21 19:30 GMT

தர்மபுரி:

நிலத்தின் பேரில் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று தருவதாக கூறி ரூ.6 கோடி நிலத்தை அபகரித்தவர்கள் மீது ஓய்வு பெற்ற தபால் ஊழியர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

தபால் துறை ஊழியர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பொடுத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கம்மாள் (வயது70). ஓய்வு பெற்ற தபால் ஊழியர். இவர் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியுள்ளதாவது:-

உயில் மூலம் எனக்கு பாத்தியப்பட்டிருந்த ரூ.6 கோடி மதிப்பிலான 1½ ஏக்கர் நிலத்தினை சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியை சேர்ந்த சசிக்குமார் மற்றும் தமி்ழ்ச்செல்வன் உள்ளிட்டோர் நிலத்தின் பேரில் நிதி நிறுவனங்களில் கோடி கணக்கிலான ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி நிலத்தை அவர்கள் பெயருக்கு கிரயம் செய்து கொண்டனர்.

நடவடிக்கை

ஆனால் இதுவரை அவர்கள் கடன் எதுவும் பெற்றுத் தராமல் மோசடி செய்து ஏமாற்றி விட்டனர். தன்னை ஏமாற்றி மோசடி செய்த நபர்களில் சிலரை நில மோசடி தொடர்பான குற்றத்திற்காக சமீபத்தில் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தனது நிலத்தையும் இதே நபர்கள் மோசடி செய்து அபகரித்துள்ளனர். சம்பந்தபட்ட சசிக்குமார், தமிழ்செல்வன் உள்ளிட்ட மோசடி நபர்களிடம் இருந்து தனது நிலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ள மோசடி நபர்கள் சேலம், தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு நபர்களிடம் ரூ.100 கோடி மதிப்பலான நிலங்களை இதே போல நிலத்தின் பேரில் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று தருவதாக கூறி நம்ப வைத்து, கிரயம் பெற்றுக்கொண்டு நூதனமாக மோசடியில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்