தென்காசியில் கலெக்டர் ஆகாஷ் தேசிய கொடியேற்றினார்

சுதந்திர தினத்தையொட்டி தென்காசியில் கலெக்டர் ஆகாஷ் தேசிய கொடி ஏற்றினார்.

Update: 2022-08-15 17:43 GMT

சுதந்திர தினத்தையொட்டி தென்காசியில் கலெக்டர் ஆகாஷ் தேசிய கொடி ஏற்றினார்.

கலெக்டர் கொடி ஏற்றினார்

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தென்காசி ஐ.சி.ஐ. அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. கலெக்டர் ஆகாஷ் காலை 9.05 மணிக்கு தேசிய கொடி ஏற்றினார். முன்னதாக மாவட்ட கலெக்டரை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன் வரவேற்றார்.

பின்னர் கலெக்டர் ஆகாஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவகுப்பினை ஏற்றுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து மூவர்ண பலூன் மற்றும் புறாக்களை கலெக்டர் ஆகாஷ் பறக்க விட்டார். இதன் பிறகு சுதந்திர போராட்ட தியாகி லட்சுமி காந்தன் பாரதிக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

206 பேருக்கு சான்றிதழ்கள்

சிறப்பாக பணியாற்றிய தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன், மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீ தாமரை விஷ்ணு, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, மாவட்ட நில மோசடி தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சந்தி செல்வி உள்பட காவல்துறையைச் சேர்ந்த 43 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதேபோல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்கள் 53 பேருக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் ஒருவருக்கும், கூட்டுறவு துறையில் 2 பேருக்கும், தோட்டக்கலை துறையில் 2 பேருக்கும், பாசனப்பகுதி மேன்மை மற்றும் நீர் மேலாண்மை திட்டத்தில் 2 பேருக்கும், தீயணைப்பு மீட்பு பணிகள் துறையில் 7 பேருக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் 3 பேருக்கும், மாவட்ட நூலகத்தில் ஒருவருக்கும், பொதுப்பணித்துறை கட்டிடம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறையில் ஒருவருக்கும் உள்பட மொத்தம் 206 பேருக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். பின்னர் பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் தனுஷ்குமார் எம்.பி., ஆய்க்குடி அமர்சேவா சங்க தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்