கோவை: ஒன்றாம் வகுப்பு மாணவி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

குழந்தையை இழந்து மிகுந்த துயரத்தில் வாடும் பெற்றோருக்கு அதிகபட்ச இழப்பீடாக 25 லட்சம் ரூபாய் வழங்க எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-08 13:04 GMT

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் வசிக்கும் ராஜாமணி என்பவருடைய 6 வயது மகள் தியா ஸ்ரீ, கோவை மாநகராட்சி பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த 5-ம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பியவுடன் கடுமையான வயிற்று வலியால் அவதியுற்ற நிலையில், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பிறகு இரவு சுமார் 10 மணியளவில் கோவை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 7.3.2024 அன்று அதிகாலை 2 மணியளவில் மரணமடைந்துள்ளார்.

அரசுப் பள்ளியில் வழங்கப்படும் சத்து மாத்திரையை அப்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களாகிய தங்களிடம் வழங்காமல், நேரடியாக தங்களது மகளுக்கு வழங்கியதால், அந்த சத்து மாத்திரையை சாக்லேட் மிட்டாய் போல் அதிகமாக சாப்பிட்ட நிலையில், கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு நாட்களில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக அம்மாணவியின் தாயார் பேட்டியளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. தனது மகள் தியாஸ்ரீ-யின் மரணம் குறித்து மருத்துவ ரீதியாக காரணம் அறிய ராஜாமணி காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சத்து மாத்திரைகளை பெற்றோர்களிடம் வழங்கி, பெற்றோர்களது கண்காணிப்பில் குழந்தைகளுக்கு கொடுக்கும் வகையில் இந்த விடியா திமுக அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டிருந்தால் இந்த அகால மரணம் நிகழ்ந்திருக்காது. இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க இந்த விடியா திமுக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரையை வழங்கி, மாணவி தியா ஸ்ரீ-ன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது காவல் துறை சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், குழந்தையை இழந்து மிகுந்த துயரத்தில் வாடும் பெற்றோருக்கு அதிகபட்ச இழப்பீடாக 25 லட்சம் ரூபாய் வழங்கவும் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்