சென்னை-எத்தியோப்பியா இடையே நேரடி விமான சேவை தொடக்கம் - முதல் விமானத்துக்கு வரவேற்பு

சென்னை-எத்தியோப்பியா நாட்டுக்கு இடையே நேரடி பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டது. முதல் விமானத்துக்கு `வாட்டர் சல்யூட்' அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-07-04 03:30 GMT

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு சரக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எத்தியோப்பியா நாட்டில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமான சேவையை தொடங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்திற்கு முன்பே பயணிகள் விமான சேவையை தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பணிகள் தொடங்க காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், எத்தியோப்பியாவில் இருந்து வாரந்தோறும் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் சென்னை விமான நிலையம் வந்து, திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் மீண்டும் எத்தியோப்பியா புறப்பட்டு செல்லும் வகையில் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியா சிறந்த சுற்றுலா மற்றும் வா்த்தக தளமாகவும் உள்ள நிலையில், அங்கு கணிசமாக தென் இந்தியா்களும், தமிழ்நாட்டை சோ்ந்தவா்களும் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபா நகரில் இருந்து முதல் விமானம் 180 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று வந்தது. சென்னையில் விமானம் தரையிறங்கி ஓடுபாதைக்கு வந்த போது, ஓடுபாதையின் 2 புறமும் தீயணைப்பு வண்டிகள் நின்று விமானத்தை வரவேற்கும் வகையில் தண்ணீரை பீச்சி அடித்து 'வாட்டர் சல்யூட்' கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதே போல் விமானத்தில் வந்த பயணிகளையும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனா்.

எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபா நகரில் இருந்து, டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருவுக்கு, ஏற்கெனவே எத்தியோப்பியா விமானங்கள் இயக்கப்படுகின்றன. தற்போது, சென்னை நான்காவது நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்