ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது - சென்னை ஐகோர்ட்டு திட்டவட்டம்

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-09-28 09:47 GMT

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ந் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி இந்து மத அமைப்பான ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பலர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ஆர்எஸ்எஸ் நிபந்தனைகளுடன் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை ஆர்எஸ்எஸ் அமைப்பு பின்பற்றும். இந்த அமைப்பைச் சேர்ந்த கோட்சே, மகாத்மா காந்தியை கொலை செய்தார். அப்போது, ஆர்எஸ்எஸ் இனிப்பு வழங்கி கொண்டாடியது. மகாத்மா காந்தியை கொன்ற ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க கூடாது என திருமாவளவன் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு முன்வு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனு மேல் முறையீடு விசாரணைக்கு உகந்ததல்ல.

மேலும், குற்றவியல் சார்ந்த வழக்கு என்பதால் சுப்ரீம் கோர்ட்டில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் என பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்