238 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு; ஈரோடு கிழக்கில் இன்று வாக்குப்பதிவு- பதற்றமான பகுதிகளில் துணை ராணுவம் ரோந்து

ஈரோடு கிழக்கில் இன்று (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 238 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பதற்றமான பகுதிகளில் துணை ராணுவம் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Update: 2023-02-26 21:20 GMT

ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந் தேதி மரணம் அடைந்தார்.

77 வேட்பாளர்கள்

அதைத்தொடர்ந்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ந் தேதி (இன்று) இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை நடந்தது. பரிசீலனையின்போது 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

6 வேட்பாளர்கள் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர். கடந்த 10-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

20 நாட்கள்

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்தார்கள். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அனல் பறக்கும் பிரசாரம்

அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

இதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், தே.மு.தி.க. வேட்பாளருக்கு ஆதரவாக அந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோரும் வாக்கு சேகரித்தனர். இதனால் அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது.

விடிய, விடிய சோதனை

நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. அதன்பிறகு தொகுதியில் வெளிமாவட்டங்களை சேர்ந்த அரசியல் கட்சியினர் இருக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இதனால் மதியத்தில் இருந்தே வெளியூரை சேர்ந்த அரசியல் கட்சியினர் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றார்கள். ஒரே நேரத்தில் வெளியேறியதால் ஈரோடு மாநகரத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேறி விட்டார்களா? என்பதை கண்காணிக்க போலீஸ் துறை சார்பில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுவினர் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் விடிய, விடிய சோதனை நடத்தினார்கள்.

அதுமட்டுமின்றி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளையும் அரசியல் கட்சியினர் வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்கள். இதனால் அங்கும் போலீசார் சோதனை நடத்தினார்கள். ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்தனர். அப்போது வெளியூரை சேர்ந்தவர்கள் தங்கியிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது.

வெறிச்சோடின

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக திருவிழாக்கோலம் பூண்டு காணப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று முன்தினம் இரவுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியது. பரபரப்பாக காணப்பட்ட முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 12 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக சோதனை சாவடிகளிலும் விடிய, விடிய தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது வெளியூரை சேர்ந்தவர்கள் யாராவது தொகுதிக்குள் வருகிறார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இன்று வாக்குப்பதிவு

இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண்களும், 25 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் ஓட்டுப்போட உள்ளனர். இதையொட்டி 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தேர்தல் பணியில் 1,206 அலுவலர்கள் பணியில் உள்ளனர். இதில் 32 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு துணை ராணுவத்தினர் ரோந்துப்பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும், வெப் கேமராக்களும் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுகிறது.

81 வகையான பொருட்கள்

ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், ஒரு கட்டுப்பாட்டு கருவியும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் 'விவிபேட்' கருவிகளும் பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவிகளை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மினி லாரிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏற்றப்பட்டன.

இதேபோல் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் பேனா, விரலில் வைக்கப்படும் அழியாத மை, வாக்காளர் பட்டியல் உள்பட 81 வகையான பொருட்களும் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு வாக்குச்சாவடி தலைமை அதிகாரி முன்னிலையில் கட்டுப்பாட்டு கருவிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், விவிபேட் கருவியும் பொருத்தப்பட்டது.

பதற்றமான வாக்குச்சாவடிகள்

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார்.

அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

32 பதற்றமான பகுதிகள் மற்றும் வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

796 புகார்கள்

தேர்தல் விதிமீறல் மற்றும் பிற காரணம் தொடர்பாக 796 புகார்கள் பதிவாகி உள்ளன. பல்வேறு புகார்களுக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளன. கூடுதல் பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டது.

ஓட்டுப்பதிவு நடக்கும்போது வாக்காளர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வைத்துதான் ஓட்டுபோட அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.

வாக்கு எண்ணும் மையம்

தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு இன்று கொண்டு வரப்படும்.

அங்கு மார்ச் 2-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவில்தான் யார் வெற்றி பெற்றார் என்ற விவரம் தெரியவரும்.

Tags:    

மேலும் செய்திகள்