தலைவர்கள் இறுதிக்கட்ட ஓட்டுவேட்டை: ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் இன்று ஓய்கிறது- முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக ஆதரவு திரட்டுகிறார்.

தலைவர்கள் இறுதிக்கட்ட ஓட்டுவேட்டை: ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் இன்று ஓய்கிறது- முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக ஆதரவு திரட்டுகிறார்.

Update: 2023-02-24 21:41 GMT

காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவால் காலியான ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இடைத்தேர்தல் களம்

இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கி விட்டது. கடந்த பொதுத் தேர்தலைப் போலவே, இடைத்தேர்தலிலும் இந்தத் தொகுதி தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

அந்தக் கட்சியின் சார்பில், மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டு உள்ளார். தே.மு.தி.க.வின் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன், சுயேச்சைகள் என மொத்தம் 77வேட்பாளர்கள் போட்டி போடுகிறார்கள்.

தி.மு.க. கூட்டணி பிரசாரம்

இந்தத் தொகுதியில் தி.மு.க. கூட்டணியின் தேர்தல் பொறுப்பாளராக ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர்கள், தலைவர்கள், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் ஈரோட்டில் முகாமிட்டு காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கொங்குநாடு மக்கள் தேசியகட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்கள் ரா.முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்பட கூட்டணியின் அனைத்து தலைவர்களும் ஈரோட்டில் கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.

அ.தி.மு.க. கூட்டணி பிரசாரம்

இதுபோல் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஈரோட்டில் தங்கி ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள். த.மா.கா. இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா, பொதுச்செயலாளர் விடியல் எஸ்.சேகர் மற்றும் நிர்வாகிகள், அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் இணைந்து தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, டாக்டர் சி.சரஸ்வதி எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகளும் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தனர்.

தே.மு.தி.க.வேட்பாளர் ஆனந்துக்கு ஆதரவாக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், செயலாளர் சுதீஷ், கட்சி தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் முன்னணி தலைவர்கள் தொடர் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரசாரம் செய்கிறார். இதற்காக நேற்று சென்னையில் இருந்து புறப்பட்ட அவர் இரவு ஈரோடு வந்தார். சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்கி உள்ள அவர் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு வீதி, வீதியாக பிரசாரம் செய்து ஆதரவு திரட்டுகிறார்.

அவர் சம்பத் நகர், பெரியவலசு, பாரதி தியேட்டர், சத்தி ரோடு, பஸ் நிலையம், மஜீத் வீதி வழியாக மக்களை சந்திக்கிறார். கருங்கல்பாளையம் காந்தி சிலை பகுதியில் காலை 10 மணிக்கு பேசுகிறார். அங்கிருந்து கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை, பவானி ரோடு வழியாக 11 மணிக்கு பி.பி.அக்ரகாரம் பகுதியில் வாக்காளர்களைச் சந்தித்து கை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்கிறார். பின்னர் பூம்புகார் நகர், காந்தி நகர், வில்லரசம்பட்டி வழியாக சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகை வந்தடைகிறார்.

பின்னர் பிற்பகல் 3 மணிக்கு சம்பத்நகர், இடையன்காட்டு வலசு, சின்னமுத்து வீதி வழியாக வந்து முனிசிபல் காலனி கருணாநிதி சிலை வளாகத்தில் மக்கள் மத்தியில் பேசி கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரிக்கிறார். தொடர்ந்து மேட்டூர் ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா வழியாக மக்களை சந்திக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 3.45 மணிக்கு பெரியார் நகரில் பொதுமக்கள் மத்தியில் இடைத்தேர்தலின் இறுதிக்கட்ட பிரசாரம் செய்கிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டியும், பிரசாரத்தையொட்டியும் ஈரோடு மாநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

இதுபோன்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் கட்சி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு இன்று பிற்பகல் 2 மணிக்கு கருங்கல்பாளையம் காந்தி சிலை பகுதியில் மக்களை சந்தித்து பேசுகிறார். முன்னதாக அன்னபூர்ணா தியேட்டர் ரோடு, காவிரி ரோடு, திருநகர்காலனி, மூலப்பட்டறை, சத்தி ரோடு, பஸ் நிலையம், எல்லை மாரியம்மன் கோவில், மஜீத் வீதி, கந்தசாமி வீதி, காவிரி ரோடு வழியாக அவர் மக்களை சந்திக்கிறார்.

பிரசாரம் ஓய்கிறது

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பலரும் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.

இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. வெளியூர் நபர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

தேர்தல் ஏற்பாடுகள்

இதற்கிடையே தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சென்னையில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் உள்ள 238 வாக்குச்சாவடிகளில் இதுவரை 32 வாக்குச்சாவடிகளை பதற்றமானதாக தேர்தல் கமிஷன் கண்டறிந்துள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். ஏற்கனவே 5 கம்பெனி துணை ராணுவமும், 2 கம்பெனி ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இவர்கள் தவிர உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

இடைத்தேர்தல் வாக்குப்பதிவின்போது 1,206 பணியாளர்கள் பணியாற்றுவர். வாக்குப்பதிவிற்காக 1,430 வாக்குப்பதிவு எந்திரங்களும், 286 கட்டுப்பாட்டு எந்திரங்களும், அளித்த வாக்கை உறுதி செய்யும் 310 'விவிபாட்' எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் பொருத்தப்படும் எந்திரங்களின் எண்ணிக்கைக்கு கூடுதலாக 20 சதவீதம் எந்திரங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

ரூ.64.34 லட்சம் பணம், பொருட்கள் பறிமுதல்

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக 688 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்டதாக ரூ.64.34 லட்சம் மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில், ரொக்கத் தொகை மட்டும் ரூ.51.31 லட்சமாகும். கைப்பற்றப்பட்ட மதுபான பாட்டில்களின் மதிப்பு ரூ.11.68 லட்சமாகும்.

தேர்தல் தொடர்பான புகார்களை சி-விஜில் செயலி மூலமாக தெரிவிக்கலாம். இதுவரை சி-விஜில் மூலம் பெறப்பட்ட 2 புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவை பணப்பட்டுவாடா தொடர்பானவை அல்ல. மேலும், 1950 என்ற எண்ணின் மூலம் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்தப் புகார்கள் உடனடியாக மாவட்டத் தேர்தல் அதிகாரிக்கும், தேர்தல் நடத்தும் அதிகாரிக்கும் விசாரணைக்காக அனுப்பி வைக்கப்படும்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை

அந்தத் தொகுதியில் தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே நடந்த மோதல் மட்டுமே சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அன்று அனைத்து வாக்குச்சாவடிகளும் 'வெப் காஸ்டிங்' மூலம் கண்காணிக்கப்படும். இதுவரை 400-க்கும் மேற்பட்ட தபால் ஓட்டுகள் வந்துள்ளன. ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் நாள் காலை 8 மணிவரை தபால் ஓட்டுகள் பெறப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்