அ.தி.மு.க. மீது பொதுமக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்- முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

அ.தி.மு.க. மீது பொதுமக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2023-02-20 21:43 GMT

சோலார்

அ.தி.மு.க. மீது பொதுமக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

சிகிச்சைக்கு உதவி

ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம் செய்தார்.

அப்போது சூரம்பட்டி அருகே உள்ள கருப்பண்ணசாமி கோவில் 4-வது வீதியைச் சேர்ந்த அஜித்குமார்-இளமதி தம்பதியினர் தங்களுடைய 1½ வயது பெண் குழந்தைக்கு உணவு குழாயில்அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் சிகிச்சைக்கு உதவி அளிக்கும்படி அவரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று சென்னையில் சிறப்பு மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க உதவி செய்வதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி கூறினார். பின்னர் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் சூரம்பட்டி நால்ரோடு, பெரியார் நகர், கிராமடை, எஸ்.கே.சி. வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.

அதிருப்தி

அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

தி.மு.க. 2 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்காமல் நாட்களை நகர்த்தி வருகிறது. எஞ்சியுள்ள ஆட்சி காலத்திலும் பொது மக்களுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இருக்காது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி பொதுமக்களிடையே அ.தி.மு.க. எழுச்சி பெற்றுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை தி.மு.க. அரசு பறித்து விட்டதால் தற்போது மக்கள் எந்த திட்டங்களும் கிடைக்காமல் கடும் அதிருப்தியில் உள்ளனர். எந்த ஒரு நலத்திட்டங்களையும் கூறி அவர்களால் ஓட்டு சேகரிக்க முடியவில்லை. அ.தி.மு.க. வின் நலத்திட்ட சாதனைகளை எடுத்துக்கூறியே பொது மக்களிடம் நாங்கள் ஓட்டு சேகரித்து வருகிறோம்.

நம்பிக்கை

2 ஆண்டுக்குள் பொதுமக்கள் தி.மு.க. அரசின் லட்சணத்தை புரிந்து கொண்டார்கள். என்னதான் சொன்னாலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைவார். அ.தி.மு.க.வின் பல்வேறு வியூகங்களை கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறோம்.

பொதுமக்கள் அ.தி.மு.க. மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். நாங்களும் பொதுமக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். தி.மு.க.வின் பொய்யான ஆட்சிக்கு முடிவு கட்ட ஈரோடு கிழக்குத்தொகுதி மக்கள் தயாராகி விட்டார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பொதுமக்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இந்தத் தேர்தல் முடிவுகள் வரும் நாடாளுமன்ற தேர்தல், அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்