புகழூர் தாசில்தார் அலுவலகம் முற்றுகை

அறநிலையத்துறையை கண்டித்து புகழூர் தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-09-25 17:45 GMT

நிலங்கள் அபகரிப்பு

கரூர் மாவட்டம், புகழிமலை முருகன் கோவில் மற்றும் புகழூர் வட்டாரத்தில் உள்ள கோவில் நிலங்களில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் கோவிலுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது. இதையடுத்து மேற்கூறிய நிலங்களில் வாழ்ந்து வரும் பொதுமக்களிடமிருந்து நிலங்களை அறநிலையத்துறை சார்பில் மீட்டு வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறையும், வக்பு போர்டு வாரியமும் மக்களிடம் இருந்து நிலங்களை பறிக்கும் சட்டத்திற்கு விரோதமான செயல்களை செய்து வருகின்றனர். நிலங்கள் வைத்திருக்கும் பொதுமக்களின் பட்டாக்களில் உள்ள பெயர்களை நீக்கி கோவில் பெயர்களை சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் பொதுமக்களிடம் உள்ள இனாம் நிலங்கள் மற்றும் மானிய நிலங்கள், குத்தகைதாரர் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

முற்றுகை போராட்டம்

மேலும் இந்த பகுதியில் சுமார் 40 முதல் 50 ஆண்டுகளுக்கு மேலாக முறையாக பத்திரப்பதிவு, மறுப்பதிவு செய்தும், கட்டுமான அனுமதிகள் பெற்று மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, சாலை வசதிகள் ஆகியவற்றை அரசின் மூலம் பெற்று முறையாக அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தியும் நிலங்களை உரிமையாக வந்த பிறகு முறையாக அனுபவித்து வருகின்றனர். ஆனால் இந்து சமய அறநிலையத்துறை இந்த நிலங்களை எந்தவித ஆவணங்களும் கொடுக்காமல், கோவில் நிலங்கள் என்று சொல்லி இந்த நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மானிய நிலங்கள் அனைத்தும், இனாம் ஒழிப்புச் சட்டத்தின் மூலம் மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை புகழூர் தாசில்தார் அலுவலகத்தின் முன்பு 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நின்று அலுவலகத்தை முற்றுகையிட்டு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதில் புகழூர் வட்டாரத்தைச் சேர்ந்த இனாம் நில விவசாயிகள், குத்தகைதாரர்கள் வீடு, மனை உரிமையாளர்கள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்