புரோக்கர் கொடுமை: நூற்பாலையில் இருந்து தப்பிய வடமாநில பெண்கள் திண்டுக்கல் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்...!

புரோக்கர் கொடுமையால் தனியார் நூற்பாலையில் இருந்து தப்பி வந்த 2 வடமாநில இளம் பெண்களை போலீசார் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

Update: 2022-07-25 05:10 GMT

வடபதுரை,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஒட்டன்சத்திரம் சாலையில் ஒரு தனியார் நூற்பாலைக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. இங்கு ஏராளமான வட மாநில தொழிலாளர்களை பாபு சான்டா என்ற புரோக்கர் ஒருவர் அழைத்து வந்து தங்க வைத்து நூற்பாலைக்கு வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரீத்தா முனாக்கூர், போர்சா ராணி ஜெயா என்ற 2 இளம் பெண்கள் அந்த புரோக்கரிடம் வேலைக்கு சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு அறை கொடுத்து தங்க வைத்து பத்து நாட்களாக அவர்கள் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தனர்.

இந்தநிலையில் புரோக்கரிடம் இளம் பெண்கள் எங்களால் இங்கு வேலை செய்ய முடியவில்லை. அதனால் எங்களை ஊருக்கு அனுப்பி விடுங்கள் என்று கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பாபு சான்டா, இளம் பெண்களை அறைக்குள் பூட்டி வைத்துள்ளார். மேலும் பெண்களுக்கு உணவு, தண்ணீர் ஏதும் கொடுக்காமல் 2 நாட்களாக கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மேலும் அவர்களின் அடையாள அட்டைகள் மற்றும் செல்போன்களையும் பறித்து வைத்துக் கொண்டார்.

2 நாட்களாக அறைக்குள் பூட்டி வைக்கப்பட்ட இளம் பெண்கள் நேற்று காலை கதவை திறந்தவுடன் புரோக்கரை தள்ளிவிட்டு தப்பித்து கதறி அழுது கொண்டே வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு ஓடி வந்தனர்.

அவர்களை ஆசுவசப்படுத்தி சிற்றுண்டி வாங்கி கொடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், இளம்பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமையை அவர்களிடம் கூறினர். இதனையடுத்து இளம் பெண்களின் நிலையை உணர்ந்த வேடசந்தூர் போலீசார் உடனடியாக இளம்பெண்கள் இருவரும் ஓடிசா மாநிலத்திற்கு பாதுகாப்புடன் செல்லவும், அவர்களுடன் துணைக்கு ஒருவர் செல்லவும் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்