வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி
வந்தவாசி அருகே சளுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி, விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி இந்திரா (வயது 50). இவர் நேற்று மாலை 3 மணி அளவில் வீட்டை பூட்டிக்கொண்டு மாட்டுக்கு தண்ணீர் வைக்க சென்றுள்ளார்.
பின்னர் மாலை 6 மணி அளவில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திரா வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் உள்ள 2 பீரோக்களும் திறந்து கிடந்தது.
மேலும் பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகைகள் மற்றும் ரூ.2,500 திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து இந்திரா வந்தவாசி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர் சுந்தர்ராஜ் தலைமையிலான குழுவினர் தடயங்களை பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.