ஓய்வுபெற்ற மின் ஊழியர் அடித்துக்கொலை

ராசிபுரம் அருகே ஓய்வுபெற்ற மின்ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2023-06-06 18:45 GMT

ராசிபுரம்

ஓய்வுபெற்ற மின்ஊழியர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள புதுப்பட்டி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70). இவர் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ருக்மணி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு முருகன் (55), பாஸ்கர் (53) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் முருகன் ஆட்டையாம்பட்டியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். பாஸ்கர் அதே பகுதியில் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சுப்பிரமணி தனியாக வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் சுப்பிரமணி புதுப்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நடத்தி வந்த தண்ணீர் கேன் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தார். நேற்று காலையில் வழக்கம்போல் சுப்பிரமணி வேலைக்கு வராததால் மணிகண்டன் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சுப்பிரமணி கட்டிலில் ரத்த வெள்ளத்தில் அடித்துக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், சுப்பிரமணியின் மகன்களுக்கும், நாமகிரிப்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

போலீஸ் விசாரணை

அதன்பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது பற்றி நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து தடயவியல் நிபுணர் வடிவேல் சம்பவ இடத்திற்கு வந்்து தடயங்களை சேகரித்தார். மேலும் நாமக்கல்லில் இருந்து துப்பறியும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

சுப்பிரமணியத்தை அடித்துக்கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? முன் விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? போன்ற பல கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற மின் ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்